ஆவடி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி எடக்கிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி பிரியா(வயது 29). இவருக்கு பட்டாபிராம் நேரு நகர் பாரதி தெருவைச் சேர்ந்த ஜெசிஜென் மார்க்கரேட் (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு ஏற்ப தனக்கு கமிஷன் தரவேண்டும் என்றும் கூறினார்.
இதை நம்பி ஜெசிஜென் மார்க்கரெட் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ரூபினி பிரியாவுக்கு கமிஷனாக கொடுத்தனர். ஆனால் பணத்தை வாங்கிய அவர், சொன்னபடி பெண்களுக்கு கடன் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
கைது
இதுகுறித்து ஜெசிஜென் மார்க்கரேட் அளித்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ரூபினி பிரியாவை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், பட்டாபிராம் பகுதியில் பல பெண்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.32 லட்சத்து 52 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான ரூபினி பிரியா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.