நிலத்தின் மூலம் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதற்கு அதிக இடம், வேலையாட்கள் மற்றும் தண்ணீர் வசதி தேவைப்படுகிறது. நகர் புறங்களில் நிலம் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதால், கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பது சிரமத்திற்குரியதாகிவிடுகிறது. இந்த சிரமத்தைப்போக்க நவீன தீவன வளர்ப்பு முறை கைகொடுக்கிறது. அதன் மூலம் மிக குறைந்த நிலப்பரப்பில், குறைந்த அளவில் தண்ணீரை பயன்படுத்தி, பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தயார் செய்யலாம். இதற்கு ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பம் என்று பெயர். இதன் மூலம் சத்துள்ள பசுந்தீவனத்தை கால்நடைகளுக்கு அளிக்க இயலும். எளிய முறையில் பெண்கள் வீடுகளிலேயே பசுந்தீவனத்தை வளர்த்து கால் நடைகளுக்கு அளிக்கலாம்.
இதற்கு ஹைட்ரோபோனிக் பசுமை வீடு உருவாக்கவேண்டும். அது மின்சாரத்தில் இயங்கக்கூடியதாகும். அதற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இதற்கு உதவ எந்திரமும் உள்ளது. அது பற்றி விரிவாக காண்போம்!
இதை படிப்பவர்களுக்கு மண் இல்லாமல் பயிர் வளருமா? வளராதா என்ற சந்தேகம் தோன்றும். ஆனால் மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டது. மண் இல்லாத தீவனம் வளர்ப்புக்கு குறைந்த அளவில் இடம் தேவை. தண்ணீர், பராமரிப்பு நேரம், உடல் உழைப்பு, முதலீடு போன்றவைகளும் குறைந்த அளவிலே தேவை. இதற்கு ரசாயன உரம் எதுவும் தேவையில்லை. குறைந்த இடத்தில் அதிகளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து பயனடையலாம்.
இந்த தீவன வளர்ப்புமுறைக்கு செங்குத்தான விவசாயம் என்று பெயர். இதில் தட்டுகளை வைக்க ஸ்டாண்ட் தயார் செய்ய வேண்டும். இதில் ஒரு அடுக்குக்கும் மற்றொரு அடுக்குக்கும் இடையே குறைந்தது ஒரு அடி இடைவெளி தேவை. ஸ்டாண்டின் உயரம் ஆறு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த ஸ்டாண்டுகளை இரும்பு அல்லது பிளாஸ்டிக் பைப், மரத்தால் தயார் செய்து கொள்ளலாம். தண்ணீர் தெளிக்க ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முளைப்புக் கட்ட சணல் சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர் நிலையை அறிய ஒரு தெர்மா மீட்டர் ஆகியவை தேவைப் படுகிறது. மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளையும் இந்த மண்ணற்ற விவசாயத்தில் வளர்க்க முடியும்.
உங்களிடம் குறைந்த எண்ணிக்கையில் பசுக்கள் இருந்தால், பசுக்கள் இருக்கும் கொட்டகையிலேயே வளர்க்கலாம். 10 பசுக்களுக்கு மேல் இருந்தால் கிரீன் ஹவுஸ் எனப்படும் பசுமைக்கூடாரம் அமைத்துக் கொள்ளலாம். இதற்காக சூரிய ஒளி நன்கு கிடைக்க கூடிய இடத்தை தேர்வு செய்திட வேண்டும். ஏனெனில் பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளியை கடத்தக்கூடிய புற ஊதாக் கதிரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கெட்டியான பாலித்தீன் ஷீட்டால் சுற்றி மூடலாம். அல்லது 90 விழுக்காடு பச்சை வலையையும் பயன்படுத்தலாம். சூரிய ஒளி உட்புகும் அதே நேரத்தில் பசுந்தீவனம் வளர்க்கும் அறையின் உள்ளே நிலவும் குளிர்நிலையையும், காற்றின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கவும் வேண்டும். வளர்ப்பு அறை எப்போதும் குளுமையாக இருக்கும் வகையில் அந்த அறையில் அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.
உற்பத்தி செய்யப்பட்ட பசுந்தீவனம் வேர்காலால் பிணைந்து காணப்படும். இதனால் கால்நடைகளுக்கு உண்ண கடினமாக இருக்கும். எனவே இதில் இருந்து பெறப்பட்ட பயிர்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை அரை மணி நேரம் நிழலில் காயவைத்து பின்னர் தீவனமாக அளிக்கலாம். கறவை மாடுகளுக்கு தினமும் 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலும், ஆடுகளுக்கு அரை கிலோ முதல் 2 கிலோ வரையிலும் இதனை கொடுக்க லாம்.
நகர்புறங்களில் 2 முதல் 4 பசுமாடுகள் வைத்து இருப்பவர்களும், நிலம் இல்லாதவர்களும் இந்த முறையை பயன்படுத்தலாம். சத்துகள் நிறைந்த சுவைமிக்க பசுந்தீவனத்தை அளிப்பதால் பாலில் கொழுப்பு தன்மை அதிகரிக்கிறது. மேலும் கால்நடைகளின் இனப்பெருக்க திறனும் மேம்படும். நிலத்தில் வழக்கமான முறையில் ஒரு கிலோ பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய 60 முதல் 70 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் இந்த முறையில் 2.5 லிட்டர் தண்ணீரே போதுமானதாகும். எளிய வேலை என்பதால் வீட்டில் உள்ள பெண்களே பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து பயன்பெறலாம்.
ஐரோப்பிய நாடுகளில் பனி மூடிய சீதோஷ்ணநிலை ஏற்படும்போது பசுந்தீவனம் கிடைக்காத நிலை உருவாகும். அப்போது இந்த முறையில்தான் தீவனத்தை உற்பத்தி செய்கிறார்கள். தற்போது தமிழகத்தில் இந்த தீவன வளர்ப்பு முறை பயன்பாட்டில் உள்ளது.
(அடுத்த வாரம்: அசோலா வளர்ப்புமுறை)
தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.