மாவட்ட செய்திகள்

மகனை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி மனைவி, மைத்துனர் படுகாயம்

புனே அருகே மகனை குத்திக் கொன்ற வாலிபர் தனது மனைவி, மைத்துனரையும் தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்றார்.

புனே,

புனே அருகே உள்ள ஹவலே கதம்வாக்பஸ்தி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது33). இவரது மனைவி கவுரி (25). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஆயுஷ் என்ற மகன் இருந்தான். 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில், யோகேசுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த கவுரி தனது பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அண்ணன் பாரத் (28) வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அங்கு வந்த யோகேஷ், மனைவி கவுரியிடம் வீட்டுக்கு வருமாறு சண்டையிட்டார். அப்போது கவுரியுடன் சிறுவன் ஆயுசும் இருந்தான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் திடீரென யோகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் கவுரி கண்முன்னே ஆயுஷின் கழுத்தில் குத்தினார்.

இதில் அவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். பின்னர் தடுக்க முயன்ற கவுரியையும் குத்தினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பாரத் ஓடி வந்தார். அவர் யோகிசிடம் இருந்த கத்தியை பிடுங்க முயன்றார். அப்போது அவரையும் யோகேஷ் குத்தி விட்டு அங்கிருந்து ஓடினார்.

பின்னர் சிறிது தூரம் சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். சத்தம் கேட்டு ஓடி அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிறுவன் ஆயுஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மற்ற மூன்று பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT