நாமக்கல்,
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு வடிவேல் உத்தரவிட்டார்.