செய்திகள்

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அரசு கஜானாவை காலி செய்யும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் சுமையாக ஏற்றி வைத்து அரசு கஜானாவை காலி செய்யும் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சரும் செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி. சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. சட்ட துவக்க விழாவிற்கு அன்றைய நிதி மந்திரி ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார். இந்தச்சட்டம் அமலுக்கு வந்த மறுநாள், இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வரி விதிப்பு முறை என்று அ.தி.மு.க. அரசு செய்திக்குறிப்பே வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தது.

ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019-2020-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தத் தொகை பெறப்பட்டதா?, ஜி.எஸ்.டி. சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?, அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு?, நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு?, எது பற்றியும் அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது.

தற்போது, டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிதி மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள், ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரியும் மத்திய நிதி மந்திரியை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடனும் தமிழக அரசின் நிதி அமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ!

எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார். மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக சரணாகதி செய்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆகவே, ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதல்-அமைச்சரும், நிதி அமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும்.

ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் சுமையாக ஏற்றி வைத்து கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இதில் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்