திருவரங்குளம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் 25 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 14, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தலா 1 என 17 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும், சுயேச்சை 2 பேரும் உள்ளனர். இதையடுத்து திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணியின் மனைவி வள்ளியம்மைக்கும், திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான.இளங்கோவனின் மனைவி ஆனந்திக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.
இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் 14 பேர் மற்றும் சுயேச்சை 2 பேர் என 16 பேர் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணியின் பாதுகாப்பில் கடந்த 3 நாட்களாக இருந்தனர். இந்நிலையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு ஞான.இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கமணியின் பாதுகாப்பில் இருந்த கோவிலூரை சேர்ந்த ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வெத்தியப்பனிடம் பேச முயற்சி செய்தனர்.
இதையடுத்து தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெத்தியப்பனையும், மற்ற 2 சுயேச்சை கவுன்சிலர்களையும் குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றிக்கொண்டு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட தயாராகினர். அப்போது ஞான.இளங்கோவனின் ஆதரவாளர்கள் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சினிமா பாணியில் காரை வேகமாக ஓட்டிய தங்கமணியின் ஆதரவாளர்கள், ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெத்தியப்பன் உள்ளிட்ட 3 கவுன்சிலர் களையும் ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றனர்.
அப்போது அங்கே இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை லத்தியை கொண்டு விரட்டினர். இதனால் அங்கிருந்தவர்கள் கலைந்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து திருவரங்குளம் ஒன்றிய அலுவலக பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஞான.இளங்கோவனின் ஆதரவாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறி வருகின்றனர். ஒரே கட்சியினரிடையே ஒன்றிய குழுத்தலைவர் பதவியை பிடிப்பதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.