புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 306 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் 55.49 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், தினமும் சோதிக்கப்படும் கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,90,730 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தமாக 68,07,226 பேருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, 2,27,755 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 13,925 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் தற்போது 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.