செய்திகள்

டெல்லியில் 24 மணி நேரத்தில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவுக்கு பலி

டெல்லியில் 24 மணி நேரத்தில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி பலரும் உயிரிழந்து வரும் நிலையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை குறிவைத்தும் கொரோனா தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் 24 மணி நேரத்தில் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உயிரை கொரோனா பறித்துள்ளது.

டெல்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவில் கைரேகை நிபுணராக பணியாற்றிய 54 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்பு இருமல், காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடுமையான மூச்சுதிணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் மாலையில் அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 52 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 11 மற்றும் 22-ந் தேதிகளில் அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்குள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவுக்கு பலியான 2 அதிகாரிகளுடன் சேர்ந்து டெல்லி காவல்துறையில் ஏற்பட்ட 3-வது உயிரிழப்பு இதுவாகும். முன்னதாக கடந்த மாதத்தின் தொடக்கத்தில் 31 வயதான போலீஸ்காரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு