புதுடெல்லி,
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நேற்று நீதிபதி ஐ.எஸ்.மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, அன்புமணி ராமதாஸ் மீது கீழ்கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்ய கடந்த 2015 அக்டோபர் 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை மனுதாரர்களுக்கு வழங்கிய பிறகு சி.பி.ஐ. கோர்ட்டு இந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்றும், இதற்காக அன்புமணி உள்ளிட்டோர் வருகிற 19-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.