செய்திகள்

40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் மயிலாடுதுறையில் கி.வீரமணி பேச்சு

40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று, மயிலாடுதுறையில் கி.வீரமணி கூறினார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் மயிலாடுதுறையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி தமிழகத்தில் அ.தி.மு.க.வை மிரட்டி 5 தொகுதிகளை வாங்கியுள்ளது. நோட்டாவுடன் போட்டியிட்டவர்கள் தான் பா.ஜனதா கட்சியினர். தமிழக மக்கள் அனைவரும் வருகிற 18-ந் தேதியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதா கட்சியில் அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, சத்ருகன்சின்ஹா போன்ற மூத்த கட்சியினர் மோடியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தென்மாநிலங்களில் பா.ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது.

கலைஞரால் அரசியலில் செதுக்கப்பட்ட ஸ்டாலின் அன்றே ராகுல் தான் அடுத்த பிரதமர் என்று கூறினார்.

திராவிட இயக்கம் கல்வி புரட்சி, சமூக மாற்றம் ஆகியவற்றை தந்தது. மோடி ஆட்சியில் வளர்ச்சி ஏற்படாமல் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய போது மோடி ஆறுதல் கூற வரவில்லை. ஒரு அனுதாப அறிக்கையை கூட அவர் வெளியிடவில்லை. 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். கருணாநிதி ஆட்சியிலே தமிழகத்தில் 29 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.