சென்னை,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இந்த தகவல்களை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர் சாலையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரையில் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
காஷ்மீரில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாவிதமான ஜனநாயக மரபுகளையும் மத்திய அரசு மீறுவதாக அவர் கண்டித்துள்ளார்.
காஷ்மீரில் எந்த ஒரு விஷப்பரீட்சையும் செய்ய வேண்டாம் என தாம் முன்பே எச்சரித்ததையும் ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தமது எச்சரிக்கையை மீறி மத்திய அரசு விஷப்பரீட்சையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் ட்விட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.