சென்னை,
சென்னையில் ஏழைஎளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்கள் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 19ந் தேதி தொடங்கப்பட்டன.
மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா அரசு தாய்சேய் நல ஆஸ்பத்திரி, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிற மாநகராட்சிகளிலும், அரசு ஆஸ்பத்திரி வளாகங்களிலும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 7 அம்மா உணவகங்களும் சேர்த்து மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நுங்கம்பாக்கத்தில் (மண்டலம்9) அதிகபட்சமாக 38 அம்மா உணவகங்கள் அமைந்துள்ளன.
தினமும் சராசரியாக 3 லட்சம் இட்லிகளும், 29 ஆயிரம் பொங்கல், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலவை சாதம், 2 லட்சம் சப்பாத்திகளும் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் இப்போது தனது சிறப்பினை இழக்க தொடங்கியிருக்கிறது. வினியோகிக்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அம்மா உணவகங்களில் முன்பு போல கூட்டமும் காணப்படுவது கிடையாது.
இதனை உணவக ஊழியர்களும் ஒரு பொருட்டாகவே நினைத்து செயல்படுவது இல்லை. பாத்திரங்கள் கழுவும் இடமும், கை கழுவும் இடங்களும் அவ்வளவு சுத்தமாகவும் இருப்பது கிடையாது. இதனால் எந்த நோக்கத்தில் இந்த அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டதோ, அது நடக்காமல் போய்விடுமோ என்று கவலை எழுந்து உள்ளது. பல அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட வருபவர்களை அங்குள்ளவர்கள் அலட்சியமாக பேசுவதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.