தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 5 பேர், அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்கள் 2 பேர் உள்பட 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் தியாகராயநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர், தனது கடையில் வேலை பார்ப்பவர்கள் என ஒரே வீட்டில் வசித்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் குரோம்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
பம்மல் நகராட்சியில் நேற்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் பம்மல், சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த குன்றத்தூரைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த மேலும் 3 தலைமை காவலர்களுக்கும், ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஒரே போலீஸ் நிலையத்தில் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே பனையூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் 75 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 12 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 8,623 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட இவர்களில் 190 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று பக்ரைனில் இருந்து வந்த 4 பேருக்கும், தாய்லாந்தில் இருந்து வந்த 3 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 2 பேருக்கும், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் என மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து 459 விமானங்களில் 31 ஆயிரத்து 381 பேர் வந்து உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.