மும்பை,
சட்டசபையில் நேற்று பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித் பவார் பதில் அளித்து பேசினார். நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய பா.ஜனதா முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம் என கூறினார். இதுகுறித்து பேசிய அஜித்பவார், தவறுகளுக்கு மன்னிப்பு கிடையாது என்றார். அப்போது உத்தவ் தாக்கரே சிரித்தார்.
இதையடுத்து அஜித் பவார் பேசும்போது, ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இல்லை. பா.ஜனதா தற்போது சட்டசபையில் இல்லாத அவர்களின் எம்.எல்.ஏ.க்களை கவனமாக பார்த்து கொள்வது நல்லது என்றார்.
கொரோனா வைரஸ்
இதற்கு பதில் அளித்து பேசிய சுதீர் முங்கண்டிவார், பா.ஜனதா, சிவசேனாவை புறந்தள்ளிவிட்டதாக நான் வேடிக்கையாக கூறினேன். ஆனால் நான் கூறியது அஜித் பவாருக்கு பொருந்தியதால், அவர் அதை பயன்படுத்தி கொண்டார் என்றார். இதேபோல கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு எம்.எல்.ஏ.க்களிடம் அஜித் பவார் கேட்டு கொண்டார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதிப்பு தொடர்பாக எந்த நேரமும் மந்திராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றார்.