செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு வங்கியின் வருமானத்தை பெருக்க முயற்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு வங்கியின் வருமானத்தை பெருக்க அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பாகூர்,

புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை, புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றின் சார்பில் அகில இந்திய கூட்டுறவு வார விழா தவளக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் தலைமை தாங்கினர். துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஸ்மித்தா வரவேற்றார். கூட்டுறவு துறை செயலாளர் அசோக்குமார், அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2018-19-ம் ஆண்டில் சிறந்த சேவை புரிந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு துறையின் கீழ் வங்கிகள், பால் நிறுவனங்கள், சர்க்கரை ஆலை, கல்லூரிகள், நூற்பு ஆலைகள் உள்ளிட்ட பல அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அவற்றில் சில அமைப்புகள் சரியான முறையில் செயல்படவில்லை.

கூட்டுறவு நிறுவனங்களை பொறுத்த வரை கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உதவிகள் செய்திடும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்திட புதுச்சேரி அரசு முடிவு செய்தது. உடனே, அதற்கு முட்டு கட்டைகள் போடப்பட்டது. ஆனால், நாங்கள் டெல்லி சென்று முட்டுக்கட்டைகளை நீக்கி, 21 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.

கூட்டுறவு வங்கியை பொருத்தவரை வருமானத்தை பெருக்க வேண்டிய நிலையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள், என்னையும், அமைச்சர் கந்தசாமியையும் சந்தித்து கூறினார்கள். அதற்கான, உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அந்த வகையில். தற்போது கூட்டுறவு வங்கியின் வருமானத்தை பெருக்க அத்தனை முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

கூட்டுறவு சர்க்கரை ஆலையை பொருத்தவரை அதை அரசால் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் அதற்கும் முட்டுக் கட்டை போடப்படுகிறது.

கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பல சங்கங்கள் சிறப்பான முறையில் செயல்படுகிறது.

நாங்கள் டெல்லி சென்று கூட்டுறவு அமைப்பின் தலைவரை சந்தித்து பேசினோம். அப்போது, புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை சிறப்பானதாக மாற்றிட தேவையான உதவி செய்ய தயராக இருப்பதாக தெரிவித்தார். எனவே கூட்டுறவு சங்கங்களை மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், கூட்டுறவு அமைப்பின் அடிப்படை தத்துவமே பாதிக்கப்படும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

விழாவில், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்; புதுச்சேரி விக்டர் கன்ட்ரோல் மற்றும் ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம்; ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர் கூட்டுறவு பண்டக சாலை; ராஜாஜி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கரிக்கலாம்பாக்கம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்; புதுவை ஆசிரியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், மாகி மீனவர் கூட்டுறவு சங்கம்;, ஏனாம் பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் விருதுகள் மற்றும் கேடயங்களை பெற்றனர்.

மேலும், சிறந்த சங்கத்துக்கான முதல்-அமைச்சரின் கேடயம் என்ற பிரிவில் புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கமும்,, கூட்டுறவு துறை அமைச்சரின் கேடயம் என்ற பிரிவில், புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் கடன் சங்கமும் தேர்வு செய்யப்பட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் இரிசப்பன் நன்றி கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு