பத்தனம்திட்டா,
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்து ஏற்பட்டது.
இதில் குழந்தை ஆலின் சிக்கி படுகாயமடைந்தது. மூளை சாவு அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் அதன் ஆறு உறுப்புகளை நன்கொடையாக கொடுக்க முன் வந்தனர்.
இதனால், 5 பேருக்கு அந்த உறுப்புகள் சென்று சேர்ந்தன. இதற்கு, கேரளாவிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இளம் வயதில் கேரளாவின் உறுப்பு நன்கொடையாளராக உருவாகி உள்ள அந்த குழந்தையின் நிலைமைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், குழந்தையின் பெற்றோருடைய பெருந்தன்மையான செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இதேபோன்று, கவர்னர் ஆர்.வி. அர்லேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். பெற்றோரின் முடிவையும் பாராட்டினர். அந்த குழந்தையின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள சூழலில், அரசு மரியாதையுடன் இறுதி சடங்கை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், அந்த குழந்தையின் உடல் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் பிற்பகல் 3 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், ஆலினின் வீட்டுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனால், சற்று தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் நடந்த சடங்கில் கேரள போலீசார் சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கேரளாவில், மிக இளம் வயதில் உறுப்பு நன்கொடை அளித்த குழந்தையாக ஆலின் உள்ளது.
5 பேருக்கு வாழ்வளித்த 10 மாத குழந்தையின் இறுதி சடங்கானது செயின்ட் தாமஸ் ஆலயத்தில் மாலை 5 மணியளவில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர், மாநில மற்றும் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.