சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் டுவீட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது! என்று பதிவிட்டுள்ளார்.