தேசிய செய்திகள்

கிரிப்டோகரன்சியாக மாற்றித்தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 12 பேர் கைது

கொள்ளையில் ஈடுபட்ட காஷ்மீரை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 12 பேரை கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விஸ்வாஸ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் விஸ்வாஸ் தனியாக டீக்கடை ஒன்றை தொடங்க முயற்சி செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் டைல்ஸ், அழகு பொருட்கள் மற்றும் டீக்கடைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும், ஜப்பானில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு விஸ்வாசும் ஒப்புக்கொண்டார்.

கொள்ளை

இந்தநிலையில் ஜப்பானில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், இந்திய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி விஸ்வாஸ் ரூ.17 1/2 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிரிப்டோகரன்சியாக மாற்ற சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த கும்பல் ஒன்று அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

கைது

இதுகுறித்து விஸ்வாஸ் உடனடியாக சஞ்சய் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொள்ளையில் ஈடுபட்ட காஷ்மீரை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 1/2 லட்சம் ரொக்கம், ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 13 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.