புதுடெல்லி,
விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (விபி.ஜி ராம் ஜி) கடந்த ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இதே திட்டம் இதற்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்ற பெயரில் 100 நாட்கள் வேலை என்ற செயலாகத்துடன் இருந்தது. ஆனால் புதிய திட்டத்தில் வேலை நாட்கள் 125 ஆக்கப்பட்டு உள்ளது. இதற்காக இடைக்கால நிதி ஒதுக்கீடாக கடந்த 9-ந்தேதி ரூ.95 ஆயிரத்து 692 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவுவதற்காக பல்வேறு யுக்திகள் வகுக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு அம்சமாக 100 மண்டல அதிகாரிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளராகவும், வள அதிகாரிகளாகவும் செயல்படுவார்கள்.
நாடு முழுவதும் இந்த திட்டத்துக்கான தயார் நிலையை உறுதி செய்வதற்காக அமைச்சகம் விரிவான முன்பயிற்சி ஏற்பாடுகளை மேற்கொண்டது. டெல்லியில் இதுதொடர்பாக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான மின் கே.ஒய்.சி. செயல்முறையை நிறைவு செய்தல், நாடுமுழுவதும் முக அங்கீகார அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்துதல், சிறப்பு டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல் மேலும் திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.