கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நேற்று 107 நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆங்காங்கே வன்முறை மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் அரங்கேறின.
குறிப்பாக பட்பாராவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக மாநில தேர்தல் கமிஷனை பா.ஜனதாவினர் குறை கூறியுள்ளனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் டம்டம் நகராட்சியில் ஓட்டுப்போட வரிசையில் நின்ற வெளியாட்களை அதிகாரிகள் விரட்டியடித்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அங்கே விரைந்தார். இதைப்போல பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியும், எதிர்க்கட்சியினரை தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.
இந்த தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறினாலும் ஒட்டு மொத்தமாக தேர்தல் அமைதியாக நடந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க. இன்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால், வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் மற்றும் பிர்பும் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும், ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.