தேசிய செய்திகள்

யமுனை நதியில் 1,300 டன் கழிவுகள் அகற்றம்; படகில் சென்று டெல்லி மந்திரி ஆய்வு

கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

டெல்லியின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மந்திரி பர்வேஷ் வெர்மா, நேற்று படகில் சென்றபடி யமுனா நதியை ஆய்வு செய்தார். டெல்லி சட்டசபை தேர்தலின்போது யமுனையை சுத்தப்படுத்துவோம் என்று பா.ஜனதா தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா அரசு பதவியேற்ற பின்பு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மந்திரி கூறுகையில், "கடந்த 2023-ம் ஆண்டு டெல்லியில் வெள்ளப் பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நதியும், வெள்ளப்பாதை அடைப்புகளும் துப்புரவு செய்து சீர்செய்யப்பட்டு உள்ளதால் எதிர்காலத்தில் வெள்ளச்சேதம் தவிர்க்கப்படும்.

கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. ஆற்றில் கழிவுகளை வெளியேற்றும் 18 முக்கிய வடிகால் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படுவதன் மூலம் யமுனை முற்றிலும் மாசடைவதில் இருந்து மீட்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT