பெலகாவி,
பெலகாவி அருகே குழிதோண்டும் பணியின்போது 14 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்தது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா இஞ்சலா கிராமத்தில் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது சில தொழிலாளர்கள் பி.சி.எம். விடுதிக்கு அருகில் வேலி அமைக்க குழி தோண்டினர்.
அப்போது அந்த குழியில் பழங்கால பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை வெளியில் எடுத்து தொழிலாளர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த பானைக்குள் தங்க புதையல் இருந்தது. அதாவது 14 தங்க நாணயங்கள் இருந்தன. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக தங்களது மேற்பார்வையாளரிடம் இதுகுறித்து கூறினர்.
பின்னர் தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சேர்ந்து அந்த தங்க நாணயங்களை எடுத்து கொண்டு கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த கிராம பஞ்சாயத்து அதிகாரியிடம் அந்த 14 தங்க நாணயங்களையும் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரி உடனடியாக தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாசில்தார், 14 தங்க நாணயங்களையும் கைப்பற்றி தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
இந்த தங்க நாணயங்களை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் இது 10-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். கங்கா ஆட்சி அல்லது விஜய நகர பேரரசு காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயங்களாக இருக்கலாம். இதுபற்றி ஆய்வுக்கு பிறகு தான் எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும் என்று தெரிவித்து உள்ளனர். அந்த நாணயங்களின் மேல்புறத்தில் யானையின் படங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.
இந்த யானையின் புகைப்படங்கள் கங்கா ஆட்சி காலத்தில் அரசு சின்னமாக இருந்துள்ளது. ஆகையால் இந்த தங்க நாணயங்கள் அனைத்தும் கங்கா ஆட்சி காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 14 தங்க நாணயங்களின் ஒட்டு மொத்த எடை 54.8 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.82 லட்சம் இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.