புதுடெல்லி
இந்தியாவுக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட 15 கிலோ வெளிநாட்டு தங்கம், ஆர்.ஐ. இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு 15 கிலோ எடை கொண்ட தங்கம் நூதன முறையில் கடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலில், வருவாய் நுண்ணறிவு (ஆர்.ஐ.) இயக்குநரக அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் டெல்லியில் உள்ள வெளிநாட்டு பார்சல் முனையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், தாய்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்த ஒரு பார்சலை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். வெளிநாட்டு நபர் ஒருவருடைய நிறுவனத்தின் பெயரில் வந்திருந்த அந்த பார்சலில், இயந்திர பாகங்கள் வடிவில் 8 துண்டுகள் இருந்தன.
அதனை பரிசோதித்து பார்த்ததில், தலா 1.5 கிலோ எடை கொண்ட மொத்தம் 12 கிலோ வெளிநாட்டு தங்கம் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து, அதனை வாங்க காத்திருந்த நபரை கண்டறிந்து அவருடைய வீட்டில் நடந்த சோதனையில் இதேபோன்று 2 வட்ட வடிவ துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தலா 1.5 கிலோ எடை கொண்டிருந்தன.
இதனால், டெல்லிக்கு 15 கிலோ எடை கொண்ட தங்கம் நூதன முறையில் கடத்தப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது. இதில், தொடர் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளியான வெளிநாட்டு நபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.