புதுடெல்லி,
நாடு முழுவதும் 12 பிரிவுகளில், 140 வழித்தடங்களில் 151 அதிநவீன ரெயில்களை தனியார் துறை மூலம் இயக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத்துறை, தனியார் துறை கூட்டாண்மையின்கீழ் (பி.பி.இ.), இந்த ரெயில்களை இயக்குவதற்கு தகுதி கோரிக்கை விண்ணப்பங்கள் (ஆர்.எப்.கியு) கோரப்பட்டிருந்தன. ரெயில்களை தனியார் இயக்குவதால் ரெயில்வே துறையில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தநிலையில், தகுதி கோரிக்கை விண்ணப்பங்கள் நேற்று திறக்கப்பட்டன. 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை எல் அண்ட் டி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிறுவனம் உள்பட 15 நிறுவனங்கள் அனுப்பி உள்ளன. இவற்றில் 14 இந்திய நிறுவனங்களும், ஸ்பெயின் நிறுவனம் ஒன்றும் அடங்கும்.
இவற்றை பரிசீலித்து, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் திட்ட முன்மொழிவு கோர அழைக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் ஒதுக்கீடுகளை முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.