புதுடெல்லி,
உக்ரைனில் கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
முதலில் இந்த பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இதன் தொடர்ச்சியாக விமானப்படையும் களத்தில் குதித்தது. விமானப்படையின் சி-17 ரக விமானங்கள் மூலம் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனில் இருந்து இதுவரை 76 விமானங்களில் 15,920 இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.