தேசிய செய்திகள்

வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த தெலுங்கானா அரசு

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக இந்த கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வருவாய்துறை மந்திரி பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்திய மந்திரி, மாநிலத்தின் 7 மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.

மாவட்ட கலெக்டர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஜெயஷங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றும் வாரங்கல் அர்பன், கரீம்நகர் மற்றும் நிஜாமாபாத் மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜோகுலாம்பா கட்வால், ரங்கா ரெட்டி மற்றும் சூர்யாபேட் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வெப்பஅலை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.