தேசிய செய்திகள்

காப்பி அடித்த மாணவர்கள்... உதவி செய்த ஆசிரியர்கள்... டிரோன் கேமராவில் சிக்கிய சம்பவம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்த மாணவர்கள் டிரோன் கேமராவில் சிக்கினர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு உதவி செய்த 17 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. பீட் மாவட்டத்தில் மட்டும் 103 மையங்களில் 45,247 மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இந்த நிலையில் பீட் மாவட்டம் சவுசாலாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் முதல் நாள் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர்.

அங்கிருந்த 16 தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்காமல் அவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். இது கண்காணிப்பு டிரோன் கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் குறித்து அறிந்த பீட் மாவட்ட கலெக்டர் விவேக் ஜான்சன், தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தேர்வு மையத்தின் தலைவர் உட்பட 17 ஆசிரியர்கள் மீது நெக்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மராட்டிய பல்கலைக்கழகங்கள், வாரியங்கள் மற்றும் பிற குறிப்பிட்ட தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.