குழந்தை மரணம் 
தேசிய செய்திகள்

பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த மயக்க மருந்து: மருத்துவர் மீது வழக்குப்பதிவு

வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில், குழந்தையின் உதட்டில் காயம் ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உதட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த 18 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒரே மகன்

கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம்-குட்டூர் கிராம பஞ்சாயத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் டி. சூரஜ். அவரது மனைவி விஜீஷா. இந்த தம்பதியருக்கு தேவன்ஷ் ஷௌரியா என்ற ஒன்றரை வயது மகனும் உண்டு. அவன் அவர்களுடைய திருமணத்திற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தான்.

உதட்டில் காயம்

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தேவன்ஷ் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில், அவனது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவனது பெற்றோர் அவனைப் பையனூரில் உள்ள பேபி மெமோரியல் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் காயமடைந்த இடத்தில் தையல் போடுவதற்காக மயக்க மருந்து கொடுத்தனர். மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே, அவனது நிலை கவலைக்கிடமானது. அதன்பின் அவனுக்கு மீண்டும் சுயநினைவு திரும்பவில்லை.

குழந்தை உயிரிழப்பு

பின்னர், அந்த ஆஸ்பத்திரி அவனை மேல் சிகிச்சைக்காகத் தங்களது கண்ணூர் கிளைக்கு மாற்றியது. அங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 9 மணியளவில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினரான கே. ராஜீவன் பேபி மெமோரியல் ஆஸ்பத்திரியின் மயக்க மருந்து நிபுணரான டாக்டர் அஞ்சலி பொதுவால் மீது பையனூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பொதுவால் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், பச்சிளங்குழந்தையின் மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டபேரணி நடத்தினர்.