தேசிய செய்திகள்

உக்ரைனில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

உக்ரனில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலை எதிர்கொள்ள இந்திய மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் உக்ரைன் அரசு 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த பொருட்கள் அனைத்தும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. அங்கிருந்து தேவைப்படும் இடங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT