மும்பையில் உள்ள நெஸ்கோ மையத்தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 4,000 பேர், ரூ.2,000 நுழைவுக் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் உட்கொண்டதில் நள்ளிரவு 12 மணியளவில் மூன்று மாணவர்கள் திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை அளிக்கப்பட்டும், 24 வயது பெண்ணும் 28 வயது ஆணும் உயிரிழந்தனர். மேலும் 25 வயது பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த போதை மாத்திரைகள் மும்பைக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆகாஷ் சமல், நெஸ்கோ ஊழியர் சன்னி வினோத் ஜெயின், உள்பாதுகாப்பு குழு உறுப்பினர் பால கிருஷ்ணன் பலராம் மற்றும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.