சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர்கள் ரோஷ்னி ஷரத் ஷிர்சாத் (வயது 18) மற்றும் ஜோஸ்னா அதுல் சவுத்ரி (வயது 20) ஜோஸ்னா அப்பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும், ரோஷ்னி மற்றொரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டும் படித்து வந்தனர்.
இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்தனர். நேற்று முன் தினம் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற 2 பேரும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து திண்டாலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாணவிகளின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது முழுமையாக ரிங் சென்றது. ஆனால் யாரும் போனை எடுத்து பேசவில்லை இதனால் போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.
அப்போது அப்பகுதி சானியா கிராமத்தில் சுவாமி நாராயண் கோவிலின் வெளியே ஒரு மொபட் நின்று கொண்டிருந்தது. அது காணாமல் போன மாணவிக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 2 மாணவிகளும் கோவில் குளியல் அறைக்கு நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் குளிய அறை பகுதிக்கு சென்றனர்.
குளியலறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவிகள் ஜோஸ்னா, ரோஸ்னி 2 பேரும் மயக்க நிலையில் கிடந்தனர்.அவர்கள் அருகே மயக்க மருந்து பாட்டில் 3 குப்பிகள் மற்றும் 3 சிரிஞ்சுகள் கிடந்தன.
உடனே மாணவிகள் 2 பேரையும் போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் 2 பேரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேலும் அவர்களது செல்போனில் தற்கொலை செய்வது தொடர்பான போட்டோக்கள் இருந்தன. அவர்கள் ஏ.ஐ.சாட், ஜிபிடி மூலம் மயக்க ஊசி போட்டு எப்படி தற்கொலை செய்வது என்ற விவரங்களை சேகரித்துள்ளனர். எனவே அவர்கள் ஊசியில் மயக்க மருந்து கலந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.