தேசிய செய்திகள்

4 மாதங்களில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட்டு வேதனை

நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் செய்திகள் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரெயில் நிலையங்கள் போன்ற நிறுவனப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி நாய் பிரியர்கள் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று சுப்ரீம்கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில்,

* பொதுவெளியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து மறுவாழ்வு மையத்தில் அடைக்க வேண்டும்.

* ஒவ்வொரு மாவட்டங்களில் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும். மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும்.

* நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும்.

* விமான நிலையங்களில் கூட நாய்கள் கடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

* 2026 தொடங்கி 4 மாதங்களில் 2 லட்சம் தெருநாய்க்கடி சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

* விலங்குகள் நலவாரிய விதிமுறைகள் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என தெரிகிறது.

* தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி விதிமுறைகளை அரசு செயல்படுத்தாததால் பிரச்சினைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.