புதுடெல்லி
மேற்காசிய போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு பல நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், நட்பு அடிப்படையில் இந்திய கப்பல்களின் பயணத்திற்கு ஈரான் அனுமதி அளித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கள் இன்று பேசும்போது, கிரீன் சாத்வி மற்றும் கிரீன் ஆஷா ஆகிய இரண்டு கப்பல்கள் முறையே நாளை மற்றும் 9-ந்தேதி இந்தியாவுக்கு வருகின்றன.
எனினும், இந்த வருகைக்கான காலநேரத்தில் மாற்றம் இருக்கலாம். இதன்படி, 60 ஆயிரம் டன் எல்.பி.ஜி. வாயுவுடன் 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வரவுள்ளன. அவை ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன என அவர் கூறினார்.
இதில், கிரீன் சாங்வி கப்பல் 46 ஆயிரம் டன் எல்.பி.ஜி. வாயுவுடனும், 25 இந்திய பணியாளர்களுடனும் வந்து கொண்டிருக்கிறது. கிரீன் ஆஷா கப்பல் 15 ஆயிரம் டன் எல்.பி.ஜி. வாயுவுடனும், 26 இந்திய பணியாளர்களுடனும் வந்து கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
பாரசீக வளைகுடாவில் தற்போது இந்திய கொடியுடன் கூடிய 16 கப்பல்கள் உள்ளன. மொத்தம் 433 இந்திய பணியாளர்கள் அந்த கப்பல்களில் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.