தேசிய செய்திகள்

சிப் வடிவமைக்கும் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க இலக்கு - மத்திய மந்திரி தகவல்

அடுத்த 10 ஆண்டுகளில் 85 ஆயிரம் வடிவமைப்பு என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

செமிகான் 2.0 திட்டத்தின்கீழ், இந்தியாவில் சிப் வடிவமைக்கும் சுமார் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

செமிகான் இந்தியா மாநாடு

செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக செமிகான் 1.0 திட்டத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மொத்தம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதுபோல், செமிகான் 2.0 திட்டத்துக்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லி பாரத் மண்டபத்தில், செமிகான் இந்தியா மாநாடு நேற்று நடந்தது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

6 தூண்கள்

அம்மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:-

செமிகான் 1.0 மூலம், கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு செமிகண்டக்டர் தொழிலுக்கான அடித்தளத்தை இந்தியா அமைத்துள்ளது. அப்போது பிரதமர் மோடி, "குறுகிய காலத்துக்கு சிந்திக்காதீர்கள். நீண்ட காலத்துக்கு சிந்தியுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

தற்போது, அந்த அடித்தளம் மீது கட்டிடம் எழுப்ப வேண்டி உள்ளது. அதற்கு 6 தூண்கள் நிறுவ வேண்டும். வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உற்பத்தி ஆலைகள், நவீன பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் ஆகியவைதான் 6 தூண்கள்.

ரூ.800 கோடி முதலீடு

செமிகான் 2.0 திட்டத்தின்கீழ், சிப் வடிவமைப்புதான் முதலாவது தூண். செமிகான் 1.0 திட்டத்தில், 105 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிப் வடிவமைப்பை முயற்சி செய்தன. ரூ.800 கோடி முதலீட்டைப் பெற்றன.

அது வெறும் தொடக்கம்தான். இந்த தடவை நமது லட்சியம் மிகப்பெரியது. செமிகண்டக்டர் தேவைக்காக நாடு முழுவதும் சிப் வடிவமைக்கும் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இந்தியாவின் இலக்கு

6-வது தூணாக திறமை இருக்கிறது. அதன்கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் 85 ஆயிரம் வடிவமைப்பு என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கே ஆண்டுகளில் 70 ஆயிரம் வடிவமைப்பு என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

செமிகான் 2.0 மூலம், செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக லட்சம் திறன்வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் உருவாக்கப்படுவார்கள். இதுவரை போடப்பட்ட அடித்தளம், வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கும் இந்தியாவின் இலக்கு நிறைவேற பாதை அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT