ஜெனீவா,
இந்தியாவில் பருவ மழை போதிய அளவுக்கு பெய்யாததால், கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பஞ்சம் தமிழகத்தையும் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த சூழலில், உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ. நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், 4.2 பில்லியன் பேர், கை கழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத்தை பேண முடியாமல் தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் 21 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 67.3 கோடி பேர் திறந்த வெளியில் கழிவுகளை கழித்து வருவதாகவும், இது பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.