தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டில் இதுவரை 23 புலிகள் சாவு

கான்ஹா புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில் ஆண் குட்டிப்புலி ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து சென்றபோது வனத்துறையினர் கவனித்தனர்.

போபால்,

மத்தியபிரதேசத்தில் கான்ஹா மற்றும் பாலகாட் மாவட்டப் பகுதியில் உள்ள அடர் வனத்தில் புலிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

கான்ஹா புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில் ஆண் குட்டிப்புலி ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து சென்றபோது வனத்துறையினர் கவனித்தனர். முதல்கட்ட ஆய்வின்படி, அந்த குட்டிப் புலிக்கு தாயிடம் இருந்து உணவு கிடைக்காததால் பசியினால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதேபோல பாலகாட் வனப்பகுதியின் வடக்கு வனப்பகுதியில் ஒரு முழு வளர்ச்சியடைந்த பெரிய புலி உயிரிழந்து கிடந்தது. பிரேத பரிசோதனையில் அதன் கோரைப் பற்கள் மாயமாகி இருந்தது தெரிந்தது. அவற்றை அங்குள்ள வனப்பகுதியில் அப்படியே புதைத்தனர். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இதுவரை உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.