தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டியம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,053 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 600 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,688 ஆக அதிகரித்துள்ளது.