புதுடெல்லி,
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானுக்கு எதிராக போரை நடத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, ஈரான் 'ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் வினியோகம் முடங்கியுள்ளது. இதன் நேரடி பாதிப்பு இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்நி லையில், நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. புதிய விலை மாற்றத்தின்படி வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது.
நாளுக்கு நாள் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் உக்கரம் அடைந்து வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. நாளுக்குநாள் இதுகுறித்த நெருக்கடி அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும் கியாஸ் சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் எனவும் தகவல் பரவியது. இதனால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.
இந்தநிலையில், 25 கோடி பேரலுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் கையிருப்பில் உள்ளதாகாவும் அடுத்த 2 மாதங்களுக்கு உள்நாட்டு தேவையை எந்த பிரச்சினையும் இல்லாமல் சமாளிக்க முடியும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.