தேசிய செய்திகள்

ரெயில்வேக்கு சொந்தமான 2,640 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு - இந்திய ரெயில்வே வாரியம் தகவல்

இது ரெயில்வேயின் வளர்ச்சி திட்டங்களை தொய்வடைய செய்யும் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 5 ஆண்டுகால தரவுகளின்படி ரெயில்வேக்கு சொந்தமான 2,640 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக இந்திய ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்கள்

இந்திய ரெயில்வேக்கு சொந்தமாக நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 10.79 லட்சம் ஏக்கர் நிலங்கள் தண்டவாளங்கள், ரெயில் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புப் பயன்பாட்டில் நேரடியாக உள்ளது. மீதமுள்ள நிலங்கள் எதிர் கால விரிவாக்க திட்டங்களுக்காகவும், காலியாகவும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு நிலங்கள் இருக்கின்றன? என்பது குறித்து ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரெயில்வே வாரியத்திடம் கேட்டிருந்த கேள்விகளையும், அதற்கு ரெயில்வே வாரியம் அளித்த விளக்கமும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

2,640 ஏக்கர்

அதன்படி, மார்ச் 2025 நிலவரப்படி, இந்திய ரெயில்வேயின் 1,068.54 எக் டேர் நிலம் அதாவது 2,640.42 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது ரெயில்வேக்கு சொந்தமான மொத்த நிலத்தில் 0.21 சதவீதம் ஆகும். இந்த நிலத்தை குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி மைதானத்தின் நிலத்துடன் (சுமார் 63 ஏக்கர்) கணக்கிட்டால், 42 மைதானங்களை இந்த ஆக்கிரமிப்பு இடத்தில் அமைக்க முடியும்.

வளர்ச்சி திட்டங்கள் தொய்வு

மத்திய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகால தரவுகளின் படி 2020-21-ல் சுமார் 2,002 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களாக இருந்த சூழலில், 2024-25-ல் 2,640.42 ஏக்கர் நிலம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்திய ரெயில்வே தனது உள்கட்டமைப்பை விரிவுபடுத்த நிலம் தேவைப்படும் இந்தச்சூழலில், மிகப்பெரிய அளவிலான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதும், அதை மீட்பதில் உள்ள சுணக்கமும் ரெயில்வேயின் வளர்ச்சி திட்டங்களை தொய்வடைய செய்யும் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.