புதுடெல்லி,
நேபாளத்தில் கடந்த 26-ந் தேதி ஏற்பட்ட பேரிடரில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்டும், தாங்களாகவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியும் உள்ள நிலையில், இன்னும் பலரை காணவில்லை.அது குறித்த விவரங்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி, 275 இந்தியர்களைப் பற்றி எந்த விவரமும் இன்னும் கிடைக்கவில்லை எனவும், இந்த விவகாரத்தில் நேபாள அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். மேலும் அவர், இதுவரை 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் சீன பகுதிகளில் சிக்கியிருந்த 1,907 பேர் பாதுகாப்பாக நேபாளத்துக்குள் வந்து விட்டனர். தற்போதைய நிலையில் இந்தியர்கள் யாரும் திபெத்தில் சிக்கியிருக்கவில்லை என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்' என்றும் தெரிவித்தார். இதைத்தவிர நேபாளத்தில் இந்தியா சார்பில் செய்யப்படும் மீட்புப்பணிகள் மற்றும் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட நிவாரண உதவிகள் விவரங்களையும் அவர் வெளியிட்டார்.