லக்னோ
உத்தர பிரதேசத்தில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுமி 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டாள்.
உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தில் கைம்கஞ்ச் பகுதியில், அனன்யா என்ற சிறுமி, இளைய சகோதரி சவும்யாவுடன் (வயது 5) பள்ளி சென்று விட்டு வீடு திரும்பினார். வழியில், ஊஞ்சல் விளையாடி விட்டு இருவரும் ஓடி வந்தனர். அப்போது விளையாட்டாக சிறுமி சவும்யா கிணறு ஒன்றின் சிமெண்ட் பலகை மீது துள்ளி குதித்து ஏறினார்.
ஆனால், அது உடைந்து விட்டது. இதில் சிறுமி, 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டாள். அனன்யா கத்தி கூச்சல் போடவே கிராமவாசிகள் திரண்டனர். ஆனால், கிணற்றுக்குள் விஷவாயு இருக்கும் என்ற பயத்தில் ஒருவரும் சிறுமியை மீட்க முன்வரவில்லை.
எனினும், கிராமவாசிகள் சிலர் கயிறு கட்டி உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், மூச்சு திணறல் ஏற்படவே அவர்கள் முயற்சியை கைவிட்டனர்.
போலீஸ் கான்ஸ்டபிள் மனோஜ், 3 முறை முயன்றும் மூச்சு திணறல் ஏற்பட அவர் மேலே திரும்பி விட்டார். பின்னர் 4-வது முறையாக காலில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு அவர் கிணற்றுக்குள் சென்றார். 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் சிறுமி சவும்யா பாதுகாப்பாக மீட்கப்பட்டாள். உடனடியாக சிறுமியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் சிறுமி உடல்நலம் தேறி வருகிறாள்.