விசாகப்பட்டினம்
ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு தேச கட்சியின் செயல் தலைவர் மற்றும் ஆந்திர பிரதேச தகவல் தொழில் நுட்பம் மற்றும் கல்வி மந்திரியான நர லோகேஷ் தலைமையில் கட்சியின் ஆண்டு மாநாடு இன்று நடந்தது. பெண் சக்தி என்ற கருத்துருவுடன் நடந்த இந்த மாநாட்டின் முதல் நாளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதன்படி, 2029-ம் ஆண்டுக்கான சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அதுபற்றிய அக்கட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.