தேசிய செய்திகள்

மணிப்பூரில் 35 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - பாதுகாப்புப்படையினர் அதிரடி

சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் நபாய் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் கசகசாவை பயிரிட்டு வளர்த்து வருவதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று சைகுல்-பிஎஸ் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட 35 ஏக்கர் கசகசா பயிர்களை பாதுகாப்புப்படையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து அழித்தனர். அழிக்கப்பட்ட கசகசா பயிர்களின் மதிப்பு சுமார் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். மேலும் இந்த கசகசா பயிர்கள் போதைக்கு பயன்படுத்த சட்டவிரோதமாக பயிரிடப்பட்டதால் அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 12 மாவட்டங்களில் 19 ஆயிரத்து 135 ஏக்கர் சட்டவிரோத கசகசா பயிர்களை மணிப்பூர் அரசு அழித்துள்ளது. இதில் கங்போக்பி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 454 ஏக்கரும், உக்ருல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 348 ஏக்கரும், சுராசந்த்பூரில் 2 ஆயிரத்து 713 ஏக்கரும் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.