சென்னை,
பொதுமக்களின் நலனை பாதிக்கும் விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட நபரோ, வேறு ஒரு தனிநபரோ அல்லது அரசு சாரா அமைப்புகளோ கோர்ட்டில் தொடருவதுதான் பொதுநல வழக்கு ஆகும். பொதுமக்களின் கடிதங்கள் அல்லது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் தன்னிச்சையாகவே கோர்ட்டுகள் பொதுநல வழக்குகளை விசாரிக்க முடியும்.
சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுத்தல், மனித உரிமை மீறல்கள், சாலை பாதுகாப்பு, ஊழல் ஓழிப்பு மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்டவை இதன் நோக்கமாகும். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வரையிலான நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 3 ஆயிரத்து 525 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் 10 வருடத்தையும் கடந்த வழக்குகள் 698 ஆகும். கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 66 பொதுநலன் சார்ந்த வழக்குகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. இதில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு (2025) 570 வழக்குகள் தேங்கியிருக்கிறது. இதேபோல கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1,872 பொதுநல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை மத்திய சட்ட மற்று நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.