மும்பை
துபாயில் இருந்து மும்பை நகரின் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் தங்கம் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, ஆர்.ஐ. இயக்குநரக அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இதில், இளம்பெண் ஒருவரை பிடித்து அதிரடியாக சோதனை செய்தனர். அவருடைய பை, உடைமைகளில் சோதனை செய்யப்பட்டன. அதில் எதுவும் சிக்கவில்லை.
இதன்பின்னர், அவருடைய கால் சட்டையை ஆய்வு செய்ததில், அதில் 4 ஆயிரம் கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் மறைத்து வைத்து, கடத்தப்பட்டது தெரிய வந்தது.
சர்வதேச சந்தையில் ரூ.6 கோடி மதிப்பிலான அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை சுங்க சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்குடன் தொடர்புடைய கடத்தல் கும்பலை கண்டறியும் விசாரணையும் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக நாட்டில் தங்க கடத்தல் அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் கடந்த 1-ந்தேதி இந்தியா-வங்காளதேச எல்லை பகுதியில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது. 180 தங்கக்கட்டிகளை கடத்திய 7 பேர் ஆர்.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 24 கிலோ எடை கொண்ட ரூ.34 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கு முன், தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு 15 கிலோ எடை கொண்ட தங்கம் கடந்த ஜூன் 30-ந்தேதி நூதன முறையில் கடத்தப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டு நபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, கடந்த மாதத்தில், மற்றொரு நடவடிக்கையில் டெல்லியில் சட்டவிரோத வகையிலான கடத்தல் கும்பலை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கம், 42 கிலோ வெள்ளி மற்றும் ரூ.8.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி ஆகியவை கைப்பற்றப்பட்டன.