புதுடெல்லி,
நடப்பு காரீப் பருவத்துக்கான யூரியா இருப்பு கிட்டத்தட்ட 48 சதவீதம் கூடுதலாக இருப்பதாக, மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பார்லி.,யில் அவர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள விளக்கம்: நடப்பு காரீப் பருவத்துக்கான யூரியா தேவை, 109 லட்சம் டன். ஆனால், இருப்பு 164 லட்சம் டன். அதாவது, உபரியாக 48 சதவீதம் யூரியா உள்ளது.
நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் யூரியா உற்பத்தி, 269 லட்சம் டன்னாக இருக்கும். உள்நாட்டில் யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு 6 புதிய யூரியா உற்பத்தி மையங்களை அமைத்துள்ளது. இதோடு யூரியா உற்பத்தி துறையை மேலும் ஊக்கப்படுத்த, தேசிய யூரியா முதலீட்டு கொள்கை 2026க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.