தேசிய செய்திகள்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியிட்ட தொகுதியில் 5 வெடிகுண்டுகள் பறிமுதல்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணூர்,

கேரள முதல்-மந்திரியாக இருப்பவர் பினராயி விஜயன். இவர் கண்ணூர் மாவட்டம் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். கேரளத்தில் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 9-ம் தேதி நடந் தது. இன்று (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் தர்மடம் தன்னடா பகுதியில் வெடிகுண்டு தயாரித்து வைத்து உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எடக்காடு போலீசார், தனிப்படை போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

அங்கு பட்டாசு தயாரிக்கும் நானு என்பவரது வீட்டில் இருந்து சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 5 வெடிகுண்டுகள், 3 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.