புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் ஒரு நான்கு மாடி கட்டிடத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தும் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் மேல்பரப்பு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்ற 30-க்கும் அதிகமான மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்களை விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியானதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஒருவர் தெரிவிக்கையில், இடிந்து விழுந்த கட்டிடத்தில், பயிற்சி மையம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அப்போது கட்டிடத்தின் மேல்பரப்பு திடீரென இடிந்து விழுந்ததாக மாலை சுமார் 4.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இந்த விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.