மும்பை,
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு மனித உயிர்கள் விலையாவது தொடர் கதையாகி வருகிறது.
குழந்தை கடத்தல்காரர்கள் என்று பதிவேற்றப்படும் ஒரு தகவலால், இந்தியா முழுவதும் அப்பாவி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள்.
சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பிச்சையெடுக்கும் 4 பெண்கள் மீது குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் மராட்டியத்தில் நடந்துள்ளது.
துலே மாவட்டத்தில் கிராம மக்களால் 5 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். மராட்டிய மாநிலம் அரசு பஸ்சில் பயணம் செய்த சிலர் ரெயின்பாடா பகுதியில் கிழே இறங்கியுள்ளனர். அவர்கள் அப்பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பேச முயற்சி செய்து உள்ளனர். அப்போது கிராம மக்கள் கும்பலாக அவர்களை அடித்துள்ளனர். இதில் 5 பேர் பலியாகினர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே குழந்தைகளை கடத்த முயற்சி செய்யப்படுவதாக வதந்தி பரவியது, இதன் அடிப்படையிலே கொலை நடந்து உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.