தேசிய செய்திகள்

நடிகர் சோனு சூட் வீட்டில் சோதனை நடத்தியது தவறு - சிவசேனா கருத்து

நடிகர் சோனு சூட் வீட்டில் சோதனை நடத்தியது தவறு என சிவசேனா கூறியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தமிழில் ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகளவில் நலத்திட்ட உதவிகளை செய்தார். இந்தநிலையில் மும்பை உள்பட சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சோனு சூட் மீதான வருமான வரித்துறை நடவடிக்கை குறித்து சாம்னாவில் சிவசேனா கூறியிருப்பதாவது:-

மகாவிகாஸ் அகாடி மந்திரிகளுக்கு எதிராக பொய் வழக்கு போடுதல், மேல் சபைக்கு 12 உறுப்பினர்களை நியமிப்பதை நிறுத்தி வைக்க மாநில கவர்னருக்கு அழுத்தம் கொடுப்பது, நடிகர் சோனு சூட் வீட்டில் சோதனை நடத்தியது போன்றவை சிறிய, குறுகிய மனப்பான்மை ஆகும். இது தவறானது ஆகும். ஒரு நாள் இது நிச்சயமாக அவர்களுக்கே திரும்பும்.

முதல் கொரோனா அலையின் போது சோனு சூட் சொந்த ஊருக்கு திரும்ப வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்ததால் மெசியாவாக கருதப்பட்டார். அப்போது பா.ஜனதா சோனு சூட்டை பாராட்டியது. சோனு சூட் செய்வதை மாநில அரசால் செய்ய முடியாதா என கேள்வி எழுப்பியது.

பா.ஜனதா சொந்த கட்சிக்காரரை போல அவரை பாதுகாத்தது. ஆனால் அவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் கல்வித்திட்டத்தின் விளம்பர தூதரான போது, வருமான வரித்துறை அவரை சோதனை நடத்துகிறது. மராட்டியத்தில் சோனு சூட்டின் அனைத்து நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளிலும் பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அவரை நேரில் அழைத்து பாராட்டினார். எப்போது டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் அவருடன் கைகோர்க்க முயற்சி செய்ததோ அப்போது அவர் வரி ஏய்ப்பாளராக மாறிவிட்டார். பா.ஜனதாவுக்கு தொடர்பில்லாத மக்கள் விசாரணை முகமைகளால் துன்புறுத்தப்படுவது சாதாரணமாகிவிட்டது.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்